20/03/2012

பன்றிக்காய்ச்சல் - திட்டமிட்ட சதியா?

இந்த கட்டுரையை தொகுத்த - ஹீலர்.அ.உமர் பாரூக் ,M.Acu, D.Ed (Acu) . அவர்களுக்கு நன்றி. 

பன்றிக்காய்ச்சல் தொடர்பான வெப்துனியா இணையதளத்தின் கட்டுரை . . .

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றிகளால் பரவியதா ஸ்வைன் வைரஸ்?



மானுட-இயற்கை உறவு நிலை சங்கிலித் தொடரில் ஒவ்வொரு கட்டத்தையும் ஒவ்வொரு நெருக்கடி காலக்கட்டமாக அடையாளப்படுத்த முடியும் என்றால் தற்போதைய கொள்ளை நோய் காலக்கட்டத்தை உயிர்ப் பயங்கரவாத நெருக்கடி காலக் கட்டம் என்றே வர்ணிக்க வேண்டும்.

டெங்கு, பறவைக் காய்ச்சல், சிக்குன் குனியா, சார்ஸ் தற்போது பன்றிக் காய்ச்சல். இவையனைத்தையும் நாம் ஏதோ இயற்கையாகவே பரவிய கொள்ளை நோய் என்று நம்புகிறோம், மாறாக மரபணு விஞ்ஞான ஆராய்ச்சியால் ஏற்பட்ட உயிர்ப் பயங்கரவாதம் என்று ஏன் அழைக்கக் கூடாது? என்ற கேள்வி இதன் தோற்றம் குறித்து ஆராயும்போது இயல்பாகவே எழுகிறது.

மரபணு மாற்ற ஆய்வுகள் பல்கிப் பெருகி அது ஓரிரு இடங்களில் வெற்றிகரமான ‘விளைவு’களை ஏற்படுத்தியது போல் விஞ்ஞான சமூகம் காட்டி வந்ததென்றால், அதன் எதிர்விளைவுகள் படு பயங்கரமாக மாறி வருவதை இன்றைய காலகட்டங்களில் நாம் பார்க்கிறோம்.

காய்ச்சல் என்பது நோயல்ல, உள்ளிருக்கும் நோயை தெரிவிக்கும் ஒரு அறிகுறி என்ற காலம் போக இன்று காய்ச்சலே விதம் விதமாக பெரும் நோய்களாக, கொள்ளை நோய்களாக பரவி வருகிறது!

எதன் மரபணுவை வேண்டுமானாலும் எதனுள்ளும் செலுத்தி அதனை வேறு ஒன்றாக மாற்றி அதன் வணிக பலன்களை அதிகரிக்கச் செய்வதே மரபனு ஆராய்ச்சியின் அடிப்படை நோக்கமாக இருந்து வருகிறது.

அதே போல் பன்றிகளின் மரபணுவை மாற்றுவது போன்ற ஆராய்ச்சிகளால் சுமார் 40 அல்லது 50 ஆண்டுக் காலம் கழித்து இன்று அது பன்றிக் காய்ச்சல் என்ற உயிர்க் கொல்லி நோயாக மாற்றமடைந்துள்ளதா என்பது ஆய்வுக்குறியது என்றாலும், இது போன்ற சாத்தியக் கூறுகளை திட்டவட்டமாக மறுப்பதற்கில்லை.

1977ஆம் ஆண்டிற்கு பிறகே இன்ஃபுளுயென்ஸா வைரஸ் என்று அழைக்கப்படும் எச்1 என்1 மற்றும் எச்3 என்2 வைரஸ்கள் மனிதர்களிடத்தில் மூச்சுக்குழல், நுரையீரல் சம்பந்தமான நோய்களை தோற்றுவிக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 1977ஆம் ஆண்டிற்கு முன்பு ஃப்ளூ காய்ச்சல் சீசனில் ஒரே ஒரு வைரஸ்தான் மனித உடலில் காணப்பட்டது.

இன்று உலகை உலுக்கி வரும் ஒரு கொடிய வைரஸாக இது உருமாறியது எவ்வாறு என்பது பல சிக்கலான சந்தேகங்களை எழுப்புகிறது.

இன்ஃப்ளூயென்ஸா வைரஸின் மேற்பரப்பில் உள்ள 'கிளைக்கோ புரோட்டீன்கள்' என்பதில் நடந்துள்ள மிக முக்கியமான சில மாற்றங்கள் (Antigenic shifts என்று அழைக்கப்படுகிறது) இன்று உலகெங்கிலும் கொள்ளை நோயாக, கொடிய உயிர்க் கொல்லி நோயாக இதனை மாற்றியிருக்கிறது.

1889 முதல் இது போன்ற ஆன்ட்டி ஜெனிக் மாற்றங்கள் 6 முறை நடந்துள்ளது. 1889-இல் எச்2 என் 2, 1900ஆம் ஆண்டு எச்3 என்8, 1918-இல் எச்1 என்1, 1957-இல் எச்2 என்2, 1968 இல் எச்3 என்2. பிறகு 1977 -இல் மீ்ண்டும் எச் 1 என் 1.

இவை அனைத்தும் பல ஆண்டுகளுக்கு மனித உடலில் காணப்படாதது. இதனால் இதனை எதிர்க்கும் சக்தி குறைவு அல்லது இல்லவே இல்லை என்று கூறலாம்.

உலகின் வடக்கு பகுதி முழுதும் 1977- 78-இல் இந்த எச்1 என்1 வைரஸ் கொள்ளை நோயாக பரவியது. இந்த வைரஸில் உள்ள HA NA புரோட்டீன்களை சோதனை செய்தபோது அது 1950ஆம் ஆண்டு இருந்த வைரஸ் போலவே இருந்தது என்று ஆய்வுகளில் கண்டறியப்பட்டது.

இந்த முடிச்சை அவிழ்க்க முயன்ற விஞ்ஞானிகள், 1950ஆம் ஆண்டின் எச் 1 என் 1 வைரஸ், பரிசோதனை நிலைய ஃப்ரீசரில் பாதுகாக்கப்பட்டு வரப்பட்டுள்ளது என்று தெரிவிக்கின்றனர். 1977ஆம் ஆண்டு இது ஒரு விபத்தாகவோ அல்லது வேண்டுமென்றோ வெளியில் பரப்பப் பட்டது என்ற முடிவுக்கு வந்தனர். இந்த சாத்தியக் கூறுகளை சீன, ரஷ்ய விஞ்ஞானிகள் மறுத்தாலும், விஞ்ஞானப்பூர்வமாக இன்றும் இந்த சாத்தியக்கூறுதான் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாக இருந்து வருகிறது.

ஆனால் இந்த முறை உலகம் முழுதும் தாக்கி வரும் இந்த எச்1 என்1 வைரஸின் விசேஷம் என்னவெனில் இந்த வைரஸில் வட அமெரிக்க, ஐரோப்பிய, ஆசிய, பன்றிகளின் மரபணு இருப்பதோடு, பறவைகள் மரபணுவும், மனித மரபணுவும் இருக்கிறது என்ற அதிசயத்தை நோய்க் கட்டுப்பாட்டு மைய ஆய்வுகள் தெரிவித்திருப்பதே!

மரபணு பொறியியல் ஆய்வுகளின் விளைவாக இந்த கொடிய வைரஸ் உருவாகியிருக்கலாம் என்று ஆஸ்ட்ரேலிய மருத்துவ விஞ்ஞானியும் 75-வயது நிரம்பியவருமான அட்ரியன் கிப்ஸ் என்பவர் எழுப்பிய ஐயம் டெக் ஹெரால்ட் என்ற பத்திரிக்கையில் மே மாதம் வெளியானது.

இவர் பன்றிக் காய்ச்சல் சிகிச்சைக்கு கொடுக்கப்படும் டாமிஃ ப்ளூ என்ற மருந்தை கண்டுபிடித்த குழுவில் இருந்தவர் என்பது மிக முக்கியமானது. வைரஸை ஒழிப்பதாக கூறிக் கொண்டு தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் நடைமுறைகளின் விளைவாய் இந்த வைரஸ் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று கூறுகிறார் கிப்ஸ்.

புளூம்பர்க் தொலைக்காட்சி நேர்காணலில் இவர் இந்த வைரஸ் பரிசோதனைக் கூடம் அல்லது ஆய்வு மையங்களிலிருந்து வெளியில் பரவியிருக்கலாம் என்று கூறியுள்ளார்.
இவர் தனது இந்த ஐயத்தையும் இது குறித்த தகவலையும் உலக சுகாதார மையத்திடம் அளித்துள்ளார். ஆனால் இதற்கான சாத்தியஙளை கூட உலக சுகாதார மைய விஞ்ஞானிகள் பரிசீலிக்கவில்லை. ஏன் பரிசிலீக்கவில்லை என்று தெரியவும் இல்லை!

1918ஆம் ஆண்டு ஸ்பெயினை தாக்கிய இந்த ஃபுளூ வைரஸின் மரபணு தொடர்ச்சியை மோசடி செய்து மாற்றி அது பல்வேறு விதத்திலும் பரவும் திறனை அதிகரித்தனர் என்று, எச்1 என்1 என்ற கொடிய வைரஸ், அதற்கான தடுப்பு மருந்து ஆய்வு ஆகியவற்றை தொடர்ச்சியாக கண்காணித்து வரும் 'வெய்ன் மேட்சென் ரிபோர்ட்', (WMR) மே மாதம் 6ஆம் தேதி குறிப்பிட்டிருந்தது. அதாவது உயிரியல் ஆய்வாளர்களிடமிருந்து இந்த தகவலை பெற்றதாக அந்த அறிக்கை கூறியுள்ளது.

மேலும் எச்1 என் 1 வைரஸை ஆய்வு செய்து வரும் மரபணு விஞ்ஞானிகள், ஏற்கனவே இதனை தடுக்கும் மருந்துகளுக்கு கட்டுப்பாடாதவாறு இதனை வளர்த்து வருவதாகவும் வெய்ன் மேட்சன் அறிக்கை கூறியுள்ளது. இதிலிருந்து மாற்றமடைந்து பல்கிப் பெருகும் மற்ற வைரஸ்களுக்கு ஏற்கனவே உள்ள தடுப்பு மருந்துகள் பயனற்று போகும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர்.

இப்பொதே மெக்சிகோ உள்ளிட்ட பல நாடுகளில் டாமிஃப்ளூ மருந்திற்கு கட்டுப்படாத வைரஸ்கள் பாதிக்கப்பட்டோர் உடலில் இருப்பதாக மருத்துவ ஆய்வுகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

தற்போது மனித உடலில் உள்ள இந்த எச்1 என்1 வைரஸ் மேலும் மாற்றங்களை சந்தித்தால் எச்5 என்1 என்ற பறவைக் காய்ச்சல் வைரஸின் குணாதிசியங்களைப் பெற்று விடும் என்று வெய்ன் மேட்சென் அறிக்கை கூறுகிறது. இந்த படு பயங்கரமான விவரத்தை உலக சுகாதார மையம் அறிந்திருந்தும் அரசியல், பொருளாதார காரணங்களுக்காக இந்த தகவலை வெளியிடாமல் வைத்துள்ளது என்று இந்த அறிக்கை கூறுகிறது.

இது போன்ற மாற்றமடைந்த வைரஸ் ஒன்று பிரேசிலில் உள்ள சில நோயாளிகளை தாக்கி சிகிச்சையை மேலும் கடினமாக்கி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மரபணு மாற்றம் என்ற ஒரு துறை செய்து வரும் பல்வேறு விதமான கொடிய ஆய்வுகளின் விளைவாக எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதே அறிய முடியாத ஒரு விஷயமாகி வருகிறது.

தடுப்பு மருந்து தயாரிக்கவோ அல்லது பன்றிகளை மேலும் சத்தாகவும், அதிக இறைச்சியைக் கொடுக்கவோ இந்த ஆய்வுகள் நடைபெற்றிருக்கலாம். போட்டி நிறைந்த பன்றி இறைச்சி பன்னாட்டு வணிகத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்க வாய்ப்புள்ளது.

தக்காளி, முருங்கைக்காய் என்று எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் மாற்ற முடியும். 10 மாடுகளில் உள்ள சத்தை ஒரு முருங்கையில் மரபணு மாற்றம் செய்து ஏற்ற முடியும். அல்லது ஒரு காலத்தில் இறைச்சிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விடும் என்ற ஒரு கற்பனையான பயத்தில் விலங்குகளின் மரபணுவை தாவரங்களுக்கு ஏற்றலாம். அல்லது இறைச்சிகள் இனிமேல் இறைச்சிகள் அல்ல 2040-ற்கு பிறகு பிறக்கும் கோழிகளும், ஆடுகளும், மாடுகளும் நம் கத்திரிக்காய் வெண்டைக்காய்க்கு சமமே என்று கூறி உலகை அதிசயிக்க வைக்கலாம்.

இன்று நாம் உட்கொள்ளும் அரிசி மரபணு ரீதியாக மாற்றப்பட்ட அரிசி என்றால் இதன் பாதிப்பு எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்பதை விஞ்ஞானிகளோ அல்லது பொது மக்களோ அறிவார்களா? 1918-இல் உருவான பன்றிக் காய்ச்சல் வைரஸை எடுத்து அதன் மரபணுவை மாற்றி தடுப்பு மருந்து கண்டுபிடிக்கிறோம் என்ற பெயரில் செய்யப்பட்டு வரும் நூதன ஆராய்ச்சி வினோதங்கள் இன்று கட்டுப்படுத்த முடியாத ஒரு பயங்கரவாத வைரஸாக உருமாறியுள்ளது எனும்போது, நாளைய சந்ததியினருக்கு தோன்றும் இனம்புரியாத நோய்கள் பற்றி விஞ்ஞானிகள் அறிவார்களா?

அர்ஜென்டீனா நாட்டில் இயற்கையாக சோயாபீன் பயிர் செய்யும் முறை ஒழிக்கப்பட்டு மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளைக் கொண்டு தற்போது சோயாபீன் விளைவிக்கப்படுகிறது. இதனால் அந்த நாட்டின் சோயாபீன் ஏற்றுமதி 2008ஆம் ஆண்டு 16.5 பில்லியன் டாலர்களாக உயர்ந்தது. இப்போது இது சுற்றுச் சூழல்வாதிகளால் கடுமையாக விமர்சனத்திற்குட்பட்டு வருகிறது.

அதாவது இந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோயாபீன் விதைகளுக்கு அமெரிக்காவின் சுற்றுச் சூழல் நாசகார நிறுவனமான மான்சான்ட்டோ ஒட்டு மொத்த குத்தகை எடுத்துள்ளது. அதாவது இந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் கிளைஃபோசேட் என்ற இலைப்புழு கொல்லி மருந்தை தாங்கும் சக்தியுடன் அளிக்கிறது. ஆனால் விளைவு இது மற்ற பயிர்களை அழிப்பதோடு, அருகில் இருக்கும் மக்களுக்கு நோய்களையும், குழந்தைகள் பிறக்கும் போது உடல் ஊனங்களையும் ஏற்படுத்துவதாக சுற்றுச் சூழல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதாவது இந்த கிளைபோசேட்டில் தவளைகளின் மரபணு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் 1990ஆம் ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜென்டீனாவில் புற்று நோய், பிறவி ஊனம், கருச் சிதைவு ஆகியவை ஏற்படுகிறது.

இது போன்ற மரபணு மாற்ற ஆய்வுகளெல்லாம் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் உதவியுடன் நடைபெறுகிறது என்பது அப்பட்டமான உண்மை. எனவே இதன் மோசமான விளைவுகளை மருத்துவ ஆதார பூர்வமாக நிரூபித்தாலும், அதெல்லாம் பொய் என்று அந்த நிறுவனங்கள் சார்ந்த விஞ்ஞானிகள் கூறிவருகின்றனர்.

அது போல் பன்றிக் காய்ச்சல் என்ற கொடிய நோய் இன்று பரவி வருவதிலும் இந்த மரபணு மாற்ற உயிர்க் கொல்லி ஆராய்ச்சிகளின் பங்கு இருக்கலாம் என்று ஆங்காங்கே சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் தங்கள் ஐயங்களை எழுப்பியபடிதான் வந்துள்ளனர். ஆனால் மீண்டும் மீண்டும் மறுப்புகள். மீண்டும் உண்மைகள்... ஆனால் மீண்டும் மறுப்புகள் என்றே இது தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இன்றைய நெரிசலான ஊடகக்காலக் கட்டத்திலும் பாதிக்கப்படும் பொது மக்களுக்கு எள்ளளவேனும் உண்மையை தெரிந்து கொள்ளும் வாய்ப்புகள் அருகி வருவதுதான் இன்று நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய ஆபத்தாகும்.